வங்கதேசத்தில் இருந்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பலில் வந்த சரக்கு பெட்டகத்துக்குள் (கண்டெய்னர்) 12 நாள்களாக அடைபட்டு கிடந்த 26 வயது இளைஞர் மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அந்த இளைஞர், வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டம், விக்ரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் என தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன் சிட்டகாங் துறைமுகத்துக்கு சென்ற அவர், அங்கு திறந்து கிடந்த ஒரு சரக்குப் பெட்டகத்தின் உள்ளே சென்று தூங்கியதாக தெரிகிறது. அவர் உள்ளே இருப்பது தெரியாமல், அந்த பெட்டகம் பூட்டப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.
பின்னர், 12 நாள்கள் பயணித்து விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்த அப்பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, உள்ளே அரை மயக்க நிலையில் முகமது ஹுசைன் கிடந்துள்ளார். பல நாள்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்ததால், அவரது உடலில் கடுமையான நீர்சத்து இழப்பு ஏற்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை முன்னேறி வருகிறது.
12 நாள்களாக பெட்டகத்தில் அடைபட்டு கிடந்த முகமது ஹுசைன் உயிர் பிழைத்தது, மிகவும் அதிசயமானது. அவர் முழுமையாக குணமடைந்த பின்னர், அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்படும். பின்னர், அவர் வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்றார் அந்த அதிகாரி.