பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பேராசிரியராகிறார் மன்மோகன்?
பஞ்சாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் சேரலாம் எனத் தெரிகிறது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ (பொருளாதாரம்) பட்டப்படிப்பு படித்த மன்மோகன் சிங், கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பொருளாதார துறைப் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் அரசியலுக்கு வந்த அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து 2 முறை பிரதமர் பதவியையும் வகித்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக அவர் உள்ளார்.
இந்நிலையில், மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு பெயரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைக்கான பேராசிரியர் பதவியை மன்மோகன் சிங்குக்கு அளிக்கத் தயாராக இருப்பதாக அந்தப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார். இதையடுத்து, அந்தப் பதவியை ஏற்பது குறித்து மாநிலங்களவைத் தலைவரிடம் மன்மோகன் சிங் கடந்த ஜூலை மாதம் கருத்து கேட்டிருந்தார். அதில், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்கும்பட்சத்தில், அது அரசமைப்புச் சட்டத்தின் 102(1) பிரிவை மீறும் நடவடிக்கையாக (ஆதாயம் தரும் பதவியை வகிப்பது தொடர்பாக) கருதப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினர் பதவிப் பறிப்பு நடவடிக்கைக்கு தாம் ஆளாக நேரிடுமா? என அவர் கேட்டிருந்தார்.
இதுதொடர்பாக ஆதாயம் தரும் பதவி தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் சமர்பித்துள்ளது.
அதில், "பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பேராசிரியர் பணியை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டால், அது ஆதாயம் தரும் பதவியாக கருதப்படாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.