மத்திய அரசின் கருத்தரங்கில் காஷ்மீர் பிரதிநிதிகள் அமளி

தில்லியில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில்

தில்லியில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜம்மு- காஷ்மீர் மாநில பொதுச் சேவை மையப் பிரதிநிதிகள் திடீர் அமளியில் ஈடுபட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதையும் டிஜிட்டல்மயமாக்குவதற்கான பொதுச் சேவை மையங்களின் கிளைகளைத் தொடங்குவதற்காக தில்லியில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் காஷ்மீரைச் சேர்ந்த பொதுச் சேவை மையங்களின் பிரதிநிதிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அதில் பங்கேற்ற துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது உரையை முடித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டார். இந்நிலையில், ஹிஸ்புல் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொன்றதால் அங்கு கடந்த 100 நாள்களாக இணையதளச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தொடரும் சிரமங்கள் குறித்தும், தங்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறியாமல் அமைச்சர் சென்றுவிட்டதாக கூறி அந்தப் பிரதிநிதிகள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "மத்திய அரசின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் கேலிக்குரியதாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 3 மாதங்களாக இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் டிஜிட்டல் சேவை எவ்வாறு சாத்தியப்படும்?' என்றனர். இதுகுறித்து இந்திய மின்-ஆளுமை சேவைகளின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் தியாகி கூறுகையில், ஜம்மு- காஷ்மீர் மாநில மக்களுக்கு மத்திய அரசின் சேவைகள் கிடைப்பதில்லை என்று அந்தப் பிரதிநிதிகள் கூறினர்; இதுகுறித்து முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு கடிதம் எழுதவுள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com