நாட்டின் முப்படைகளும் அரசுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டவை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அண்மையில் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோர பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் முயற்சி மேற்கொள்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமறத்தில் ஒரு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்குரைஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்திருந்த அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் இத்தாக்குதலை நடத்த தாங்கள்தான் காரணம் என்று உரிமை கோருகின்றனர். ஆனால் ராணுவம் நடத்திய இத்தாக்குதலுக்கு அவர்கள் காரணமல்ல. ஏனெனில் அரசியல்சாசன விதிகளின்படி முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவர்தான் தலைவராவார்.
எனவே, இத்தாக்குதலுக்கு உரிமை கோருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் எம்.எல்.சர்மா கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அமிதவா ராய், யூ.யூ.லலித் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அதைத் தள்ளுபடி செய்கிறோம். முப்படைகளும் அரசுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டவை. இல்லாவிட்டால் இந்த நாட்டில் ராணுவச் சட்டம்தான் இருக்கும்' என்று கூறி, மனுவை நிராகரித்து விட்டனர்.