இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி சுர்ஜித் சிங்கை நாட்டை விட்டு வெளியுறுமாறு உத்தரவிட்ட பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் உள்பட பல்வேறு இந்திய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு, அதை மறுப்பதையே பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக உதவி அலுவலர் சுர்ஜித் சிங்கை, பாகிஸ்தானில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று அறிவித்திருப்பதோடு, உடனடியாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. அந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தூதரக நெறிமுறைகளுக்கு உள்பட்டு சுர்ஜித் சிங்கின் நடவடிக்கைகள் அமையவில்லை என்ற முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை அவர் மீது பாகிஸ்தான் சுமத்தியுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிராக உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெஹ்மூத் அக்தர் வியாழக்கிழமை போலீஸாரால் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சுர்ஜித் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு, பிறகு அதை மறுப்பதையே பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்பதை இந்நடவடிக்கை உறுதிசெய்கிறது என்றார் விகாஸ் ஸ்வரூப்.