கேரளத்தில் தெரு நாய்கள் அச்சுறுத்தல் காரணமாக அவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நடவடிக்கைக்கு எதிராக குரலெழுப்பி வரும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல் வலியுறுத்தினார்.
கேரளத்தில் தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதைக் கட்டுப்படுத்த அந்த மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், தெரு நாய்களைக் கொல்பவர்கள் மீது கேரள சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேனகா காந்தி அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கேரள சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை கூடியதும், இதுதொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை ஆளும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை ஆதரித்து, பாஜக உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பேசினார்.
பின்னர், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் ஜலீல் பேசியதாவது: நாட்டின் கூட்டாட்சி முறையைப் பாதிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் கருத்து பொறுப்பற்றதாகும். பிரதமர் மோடி தலையிட்டு, அவரைக் கட்டுப்படுத்த வேண்டும். தெரு நாய்கள் கடித்து கடந்த நான்கு மாதங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 175 குழந்தைகள் உள்பட 701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையின் தீவிரம் கருதி, தெரு நாய்கள் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் ஜலீல்.