காஷ்மீர் பண்டிட்டுகளுக்கென சிறப்பு பொலிவுறு நகரம் அமைக்கக் கோரிக்கை
புலம் பெயர்ந்து வசிக்கும் தங்களுக்கென காஷ்மீரில் பொலிவுறு நகரம் ஒன்றை அமைத்துத் தருமாறு மத்திய அரசிடம் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியப் பிரிவினையின்போதும், அதைத் தொடர்ந்து காஷ்மீரில் நிலவிய அசாதாரண அரசியல் சூழல் காரணமாகவும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளானதால், அங்கு வசித்து வந்த பண்டிட் சமூக மக்கள் புலம் பெயர்ந்து ஜம்மு, தில்லி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் கனவுத் திட்டமான பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் தங்களது பகுதியையும் இணைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஒய்ஏஐகேஎஸ் என்ற காஷ்மீர் பண்டிட் நல அமைப்பின் தலைவர் ராம் கே. பட் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
புலம் பெயர்ந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக காஷ்மீர் பண்டிட்டுகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் வாக்குறுதி அளித்திருந்தனர். இந்நிலையில், பொலிவுறு நகரங்களாக மாற்றப்படவுள்ள 100 இடங்களில் 60 பகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அவ்வாறு வெளியான அறிவிப்பில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக பிரத்யேகமாக பொலிவுறு நகரமொன்று அமைக்கப்படும் என்று கூறப்படவில்லை. பொலிவுறு நகரங்கள் பட்டியல் தயாரிப்பில் காஷ்மீர் பண்டிட்டுகளின் நலன்களை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. புலம்பெயர்ந்து வசிக்கும் பண்டிட்டுகளுக்காக ஒரு பொலிவுறு நகரத்தை அமைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அதேபோல், காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.