கேரளத்தில் பாஜக தொண்டர்கள் புரிந்த தியாகங்களுக்கு உரிய பயன் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கேரளத்தில் பல்வேறு வன்முறைத் தாக்குதல்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்களது உயிரை இழந்ததைச் சுட்டிக்காட்டி இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக கேரள மாநிலம், கோழிக்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கேரளத்தில், முந்தைய பாரதீய ஜனசங்கம், தற்போதைய பாஜக ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டர்கள், தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர்த் தியாகம், நாட்டில் உள்ள பிற பாஜக தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர்கள் செய்த தியாகங்களும், அவர்கள் பட்ட துன்பங்களும் வீண்போகாது. கேரளத்தின் தலையெழுத்து மாறப்போகிறது. அந்தப் பணியை செய்யும் கருவியாக பாஜக இருக்கும் என்றார் பிரதமர் மோடி.
கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:
கேரளத்தில் பாஜக தொண்டர்கள், வன்முறையை எதிர்கொள்வது ஒன்றும் புதிதல்ல. முதல்வர் பினராயி விஜயனின் சொந்தத் தொகுதியிலும், பாஜக தொண்டர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வன்முறைத் தாக்குதல்கள் மூலம், கேரளத்தில் பாஜகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்று அவர்கள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்) நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். இதுபோன்ற தாக்குதல்களுக்கு இடையேயும், பாஜக தனது சக்தியை அதிகரித்துக் கொள்ளும்.
பாஜக தொண்டர்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானோருக்கு எதிராக, ஜனநாயக வழியில் கட்சி தகுந்த பதிலடி கொடுக்கும். கேரள சட்டப்பேரவைக்கு அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றார் அமித் ஷா.