தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், விமானப் படை தலைமைத் தளபதி அரூப் ராஹா, கடற்படை துணை தலைமைத் தளபதி அட்மிரல் கே.பி.சிங் ஆகியோர் சந்தித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், பிரதமருடனான இந்தச் சந்திப்பு வழக்கமானதே என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
முப்படைத் தளபதிகளுடன் ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா சில காரணங்களால் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
முன்னதாக, உரி தாக்குதலுக்குப் பிறகு ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங், பிரதமரையும், பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் அவ்வப்போது சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தையொட்டி
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.