கடலூர், ஹைதராபாத் உள்பட ஐந்து பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி இணையவழியே திங்கள்கிழமை (செப்.26) கலந்துரையாட உள்ளார்.
சிறு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதுதொடர்பாக அவர்களுக்கு உள்ள கோரிக்கைகள், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புதிய பயிர் ரகங்கள், மலர் வகைகள் ஆகியவற்றை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஹிமாசல உயிரி வளத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய்குமார், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கடலூர், ஹைதராபாத், ஜம்மு, ஹிமாசலப் பிரதேசத்தின் பலாம்பூர், அஸ்ஸாமின் ஜோர்ஹாட் உள்ளிட்ட ஐந்து பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணையவழி தொழில்நுட்பம் (வெப்காஸ்ட்) மூலம் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அதற்கான விளக்கங்களையும், தீர்வுகளையும் அவர் தெரிவிப்பார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் குறையாமல் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு நடுவே புதிய வேளாண் பயிர் ரகங்கள் மற்றும் மலர் வகைகளை அவர் அறிமுகப்படுத்துகிறார். அந்த பயிர் இனங்களை சாகுபடி செய்தால் சிறு விவசாயிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றார் அவர்.