பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடக் கோரி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவில், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலவில்லை என்றும், தமிழகத்துக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடும்படி பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யவும் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் அம்மாநில குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருப்பதாகக் கூறி, அம்மாநில சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.