பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸூக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை கண்டித்து, காங்கிரஸ் மகளிர் அணியினர் கருப்புக் கொடியை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லியில் இருந்து பஞ்சாபுக்கு கடந்த முறை ரயிலில் வந்தபோது, அவரை பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த முறை ரயில் மூலம் வராமல், விமானம் மூலம் அவர் அமிருதசரஸýக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
அமிருதசரஸ் விமான நிலையத்தில் இருந்து ஜலந்தருக்கு அவர் காரில் ஏறிச் சென்றார். அப்போது அவரைக் கண்டித்து, விமான நிலையத்துக்கு வெளியே காங்கிரஸ் மகளிர் அணியினர் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மம்தா தத்தா தலைமையில் கருப்புக் கொடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மம்தா தத்தா பேசுகையில், "தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், பெண்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய தலைவர் பஞ்சாபுக்கு வருவதை காங்கிரஸ் சகித்துக் கொண்டிருக்காது' என்றார்.
கேஜரிவாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்புக் கொடியை காட்டியபோது, அங்கிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, மம்தா தத்தா உள்ளிட்டோர் போலீஸாரால் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதே பகுதியில் சாலையில் அமர்ந்து காங்கிரஸ் மகளிர் அணியினர் சுமார் ஒரு மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.