பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 19-வது சார்க் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவு செய்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சார்க் உச்சி மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது தொடர்பாக, அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை எங்களுக்கு வரவில்லை.
ஐ.நா.வின் விதிகளையும், சர்வதேசச் சட்டத்தையும் மீறி பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிட்டு வருகிறது.
ஆனால், பிராந்திய ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றை அளிப்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியுடன் உள்ளது.
இந்தப் பிராந்திய மக்களின் நலனுக்காக பாகிஸ்தான் அரசின் பணிகள் தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.