புது தில்லி: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு இனிமேல் தண்ணீர் திறக்க முடியாது என்று ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசு தலைமையிலான காவிரி நதிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு இதற்கு மேல் காவிரி தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை நிலவுவதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஒரு போக சம்பா சாகுபடிக்காவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படியும், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.