புது தில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண முடியவில்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.
காவிரி நதிநீர் விவகாரம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் புது தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி, இரு மாநிலங்களும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இருமாநிலங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இரு மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம். ஆனால், காவிரி பிரச்னையில் நீதிமன்றத்திற்கு வெளியே இரு மாநிலங்களும் பேசி தீர்வு காண முடியவில்லை.
குழுவை அனுப்பி கர்நாடக அணைகளை சோதனை நடத்த வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழகம் ஏற்க மறுத்துவிட்டது.
தமிழகத்துக்கு இதற்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்று உமா பாரதி கூறினார்.