புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்கள் பெயரை 4 மாநில அரசுகளும் நாளை மாலைக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமா பாரதி நடத்திய பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையடுத்து, வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சனிக்கிழமை மாலை 4 மணிக்குள் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகளும் தங்களது மாநிலம் சார்பில் மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்.
அக்டோபர் 4ம் தேதி அதாவது வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை மாநில அரசிடம் இருந்து பெற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.