லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முடிவாகும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற விவசாயக் கடனான ரூ.36,359 கோடியை தள்ளுபடி செய்து, நேற்று நடைபெற்ற உத்தரப்பிரதேச அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்த கடன் தள்ளுபடியானது விவசாயிகளுக்கு பகுதி அளவிலான நிம்மதி என்றாலும் சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு அடியாகும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்பதை காங்கிரஸ் எப்பொழுதும் வரவேற்றே வந்திருக்கிறது.
மத்திய அரசை பொறுத்த வரை அவர்களுக்கு வறட்சியில் வாடும் விவசாயிகளின் துயரை தீர்க்கவேண்டிய தேசிய அளவிலான கடமை உள்ளது. அதை விடுத்து மாநிலங்ககுக்கு இடையே பாரபட்சம் காட்டும் அரசியல் விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.