ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்து ஆணையத்தின் 21 பக்க அறிக்கை சொல்லும் காரணங்கள் என்ன?

சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்து ஆணையத்தின் 21 பக்க அறிக்கை சொல்லும் காரணங்கள் என்ன?

சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான 21 பக்க அறிக்கையில் முக்கியமான காரணங்களையும் வெளியிட்டுள்ளது.  

அந்த 21 பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய காரணங்கள் இதோ...

- ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

- இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடிச் சோதனை நடத்தி பணப் பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக விக்ரம் பாத்ரா என்கிற புதிய அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

- ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து முறைகேடுகளைத் தடுக்க தீவிர ஆலோசனையும் நடத்தினார். பணப் பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க 70 நுண் பார்வையாளர்களும் பணி அமர்த்தப்பட்டனர்.

- பணம் தவிர விளக்குகள், டி.‌ஷர்ட்கள், சில்வர் தட்டுகள், செல்போன்கள், புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

- அ.தி.மு.க. அம்மா அணியினர் மிகப்பெரிய அளவில் தொப்பிகள், தலையை மூடக்கூடிய துணிகளை தொகுதி முழுவதும் விநியோகம் செய்துள்ளனர்.

- ஒரு நிறுவனத்திடம் இருந்து 1000 தொப்பி ரூ.30 ஆயிரம் விலையில் மொத்தம் 10 ஆயிரம் தொப்பிகள் ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

- அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் கட்சி சின்னத்துடன் கூடிய டி.‌ஷர்ட்டுகள் விநியோகம் செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த அணியைச் சேர்ந்த மணி என்பவர் பிடிபட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 டி.‌ஷர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

- பரிசு பொருள் விநியோகம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

- தேர்தல் பொது பார்வையாளர், சிறப்பு பார்வையாளர் ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் கமி‌ஷனுக்கு சவால் விடும் வகையில் பண பலம், தேர்தல் விதிமீறல், சட்டம்-ஒழுங்கு மீறல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்றவை நடப்பதாகவும், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி தலைவர்கள் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

- பணப்பட்டுவாடா சம்பந்தமாக புகார்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி வருமான வரித்துறை சோதனை நடத்தி தேர்தல் கமி‌ஷனிடம் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது.

- இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

- விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 5 கோடி ரூபாய் ரொக்க பணம் சிக்கியது.

- டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.

- சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

- அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களிடமிருந்து ரூ.3 கோடிக்கும் மேல் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

- எம்எல்ஏக்கள் விடுதியில் விஜயபாஸ்கருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பணப்பட்டுவாடா எப்படி எல்லாம் நடத்த வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய ஆவணங்களும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

- ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆவணத்தில் சில அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தன.

- அதிமுக சசிகலா அணி வேட்பாளர், அதாவது அதிமுக (அம்மா) அணியின் சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ரூ.89 கோடி வரை செலவிடப்பட்டதாக சோதனையில் தெரியவந்தது.

- மொத்தம் உள்ள 2.6 லட்சம் வாக்காளர்களில் 85 சதவீதம் பேருக்கு தலா ரூ. 4,000 வீதம் ரூ.89 கோடி ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது.

- ஆர்கே நகரில் கடந்த 7 ஆம் தேதி வரை ரூ,18,80,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- பரிசு பொருட்கள் கொடுத்ததாக எழுந்த புகார்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

- கட்சியின் சில அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பிரித்துத் தரப்பட்டிருந்ததும் வருமான வரி கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

- இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரியான விக்ரம் பத்ரா, தமிழக தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடமும் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. இதனை ஏற்று ராஜேஷ் லக்கானி, விக்ரம் பத்ரா இருவரும் அறிக்கை அளித்ததும் அவர்களுடன் தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

- அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தலை ஒத்திவைத்து விட்டு வேறு ஒருநாளில் தேர்தலை நடத்தலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தேர்தல் நியாயமாக நடத்தும் வகையில் இடைதேர்தல் அறிவிப்பு முறையான காலத்தில் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com