உழவர்கரை(புதுச்சேரி): ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கழிப்பறை கட்டுங்க என்று பயனாளிகள் காலில் விழுந்து நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்ட சம்பவம் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது உழவர்கரை நகராட்சி. இங்கு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்த 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு பயனாளிகள் சிலருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் சிலர் இன்னும் கழிப்பறையை கட்டவில்லை.
இதன் காரணமாக அவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை உண்டாக்க நகராட்சி ஆணையர் ரமேஷ் முடிவெடுத்தார். அதன்படி இன்று பிற நகராட்சி ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வீட்டிற்கு ரமேஷ் சென்றார்.
அங்கு இருந்த பயனாளிகளின் காலில் விழுந்து உடனடியாக அவர்கள் கழிப்பறையை கட்ட வேண்டும் என்று ரமேஷ் கேட்டுக்கொண்டார். அவருடன் நகராட்சி ஊழியர்களும் காலில் விழுந்து வேண்டிக் கொண்டனர்.
திட்டத்தினை செயல்பட வைப்பதற்காக நகராட்சி ஆணையர் காலில் விழுந்த சம்பவம் பொது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.