திருவனந்தபுரம்: கேரள மாநில அமைச்சர் ஒருவரையே மாநில நுண்ணறிவுப் பிரிவு ஏ .டி.ஜி.பிக்கு அடையாளம் தெரியாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநில காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவு ஏ .டி.ஜி.பியாக இருப்பவர் மொஹம்மத் யாசின்.அவர் இன்று காலை 7.30 மணி அளவில் மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரனின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
அவர் வந்துள்ள செய்தியறிந்து அவரை சந்திப்பதற்காக அமைச்சர் சந்திரசேகரன் வெளியில் வந்துள்ளார். அவரிடம் யாசின், 'நீங்கள் விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார் தானே?' என்று கேட்டுள்ளார்.
இதனால் குழப்பமடைந்த அமைச்சர் சந்திரசேகரன் அங்கிருந்த தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சக அமைச்சரான சுனில்குமார் இல்லத்தை காட்டுமாறு கூறி அனுப்பியுள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது, 'ஒரு மூத்த அதிகாரியிடம் இருந்து இத்தகைய தவறுகள் இனிமேல் நடக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
மாநில காவல் துறை தலைவரான லோக்நாத் பெஹ்ரா, 'இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.