குர்கான் : தெற்கு தில்லியில் உள்ள சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டக் குழந்தை மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பச்சிளம் குழந்தை, மேல் சிகிச்சைக்காக தெற்கு தில்லியில் உள்ள சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு நேற்று காலை 11 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, ஆம்புலன்ஸில் எரிபொருள் காலியானதால், அது நடுவழியில் நின்றதால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.
இது குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குர்கான் சுகாதாரத் துறைக்கு 16 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அதில் அரசு மருத்துவமனைக்கு 2 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து ஆம்புலன்ஸ்களும் 2 லட்சம் கி.மீட்டருக்கும் மேல் ஓடிய மிகவும் பழைய வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.