பெங்களூரில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாகராஜ் வீட்டில் பதுக்கிவைத்திருந்த பல கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். குற்ற வழக்கில் சோதனை நடத்துவதற்காகச் சென்ற போது இந்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரியல் எஸ்டேட் உரிமையாளர் கடத்தல், கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக பெங்களூரு ஸ்ரீராமபுரம் ஹனுமந்தபுராவைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாகராஜ் (எ) பாம்நாகாவின் வீடு, அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாநகர துணை ஆணையர் அஜய்ஹிலோரி தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டின் 3-ஆவது மாடியில் உள்ள அறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், வட்டாட்சியர் தலைமையில் பணத்தை எண்ணும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, தலைமறைவான நாகராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.