பாட்னா: வரதட்சிணை பெறும் திருமண நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தினார்.
சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
வரதட்சிணை முறையை நம் வழியிலேயே நாம் அகற்றியாக வேண்டும். ஒரு திருமணத்தில் வரதட்சிணை வாங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்தால், அந்த திருமண நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்கக் கூடாது.
இதுதவிர, சிறார்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் அவலம் நிலவுகிறது. அந்த சமூகக் கொடுமையில் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும். மாநிலத்தில் சமூகப் புரட்சிக்கு வித்திடும் வகையில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு கிராமப்புறப் பகுதிகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசமைப்புச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற வேண்டுமெனில், சமூகத்தில் பின்தங்கி வாழும் மக்கள் தங்களை கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பிகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரதட்சிணைக் கொடுமை, சிறார் திருமணம் ஆகியவற்றுக்கு எதிரான பிரசாரத்தை முதல்வர் நிதீஷ் குமார் முன்னெடுத்துள்ளார்.