ஸ்ரீநகர்: காஷ்மீரில் முன்னாள் ராணுவ அதிகாரி, வழக்குரைஞர் ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் உள்ள பிஞ்சோரா கிராமத்தில் வசித்து வருபவர் வழக்குரைஞர் இம்தியாஸ் அகமது கான். இவர் முன்னாள் அரசு வழக்குரைஞராக பணியாற்றியவர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இம்தியாஸ் அகமது கான் தொழுகைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இம்தியாஸ் அகமது கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று பந்திபோரா மாவட்டத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் ரஷீத் பராய் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.