விசாகப்பட்டினம்: எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயாராக உள்ளதாக இந்தியக் கடற்படைத் தலைமை தளபதி சுனில் லாம்பா தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் கடற்படை வீரர்களுக்கு விருது வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகிலேயே மிகவும் வலுவான கடற்படையாக இந்தியக் கடற்படை வளர்ந்து வருகிறது. எனவே, எந்த அசாதரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயாராகவே உள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது.
இப்போது, கடற்படைக்குத் தேவையான கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்டு வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.
கடற்படையில் இருந்து ஓய்வுபெற்றுள்ள ஐஎன்எஸ் விராட் கப்பலை அருங்காட்சியகமாக்கும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டுமென்ற ஆந்திர அரசின் கோரிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. எனினும், கடற்கரை அமைந்துள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் மத்திய அரசு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது என்றார் அவர்.