நகர்ப்புற வாடகை வீடுகள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.
அனைவருக்கும் நியாயமான விலையில் வீடு கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ள மத்திய அரசு, இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2008 நகரங்களில் 17.73 லட்சம் குறைந்த விலை வீடுகளைக் கட்டித் தர மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.96,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
ஊரக, நகர்ப்புற வாடகை வீடுகள் கொள்கைக்கு விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். மாணவர்கள், வெளியூர்களில் இருந்துவந்து குடியேறுபவர்கள், தனியாக தங்கி வேலை செய்யும் பெண்கள் என பல்வேறு தரப்பினரின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த வாடகை வீட்டுக் கொள்கை அமையும். இது தொடர்பான ஆலோசனைகள் முடிந்து வரைவு மசோதா தயாராக உள்ளது.
நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 30 சதவீதம் பேர் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்கள். நகரங்களில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளியூர்களில் வந்து குடியேறியவர்களாக உள்ளனர்.
13 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மனை வணிக விதிகளை ஏற்கெனவே அறிவித்துவிட்டன. மீதமுள்ள 16 மாநிலங்கள் விதிகளை இறுதி செய்து வருகின்றன.
இதுவிஷயத்தில் மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். மனை வணிக கட்டுப்பாடு, மேம்பாட்டுச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் விரும்புகின்றனர் என்றார் அவர்.