புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று (ஏப்ரல் 23) நிதிஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 30 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல் அமைச்சர்களின் கூட்டு முயற்சிகளாலேயே புதிய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வை புலப்படும்.
சாலைகள், மின்னூற்பத்தி உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு மாநில அரசுகளை மோடி அறிவுறுத்தியுள்ளார்.
வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவையான மூலதனச் செலவுகளை தாராளமாகச் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
15 ஆண்டு கால இலக்கு. 7 ஆண்டுகளுக்கான யுக்தி, 3 ஆண்டுகளுக்கான செயல் என 3 கட்டங்களாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நிதி ஆயோக் பரிசீலித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஒரே தேசம், ஒரே நோக்கம், ஒரே தீர்மானம் என்ற உணர்வை ஜி.எஸ்.டி. பிரதிபலிக்கிறது. அதுபற்றிய விவாதம் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஜி.எஸ்.டி.க்கான கருத்தொற்றுமை கூட்டாட்சிக்கான பெரிய கல்வெட்டாக வரலாற்றில் இடம்பெறும் என கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 30 மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மைவாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவீடு என்ற கொள்கையை தவிர்க்க வேண்டும், விவசாயிகளின் நியாமான கோரி்க்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், இலங்கையில் வசமுள்ள 133 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மாணவர்களுக்கு 1,882 கோடி உதவித்தொகை வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.