புதுதில்லி: வாக்காளர்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் வசதி கொண்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட (விவிபிஏடி) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.
இதுதொடர்பாக, குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இப்பிரச்னையைத் தீர்க்க "விவிபிஏடி" என்ற கருவிகளை வாங்க மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சரவை கூடி, தேர்தல் ஆணையத்தின் இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து வந்தது.
இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (விவிபிஏடி) வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, 16 லட்சத்துக்கும் மேற்பட்ட கருவிகளை வாங்க தேர்தல் ஆணையம் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த கருவி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வாக்காளர், தனது வாக்கை பதிவு செய்தபின்னர், இந்தக் கருவியில் உள்ள திரையில் அவர் வாக்களித்த சின்னம் தெரியும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலுமாக நீங்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.