பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணம் செய்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, சிரவணபெலகோலாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டார். அவருடன் மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜ.பரமேஸ்வரா உடனிருந்தார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று மோதியது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அவசர செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டு பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் ஹெலிகாப்டரில் அனைத்துவித சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டது. சிரவணபெலகோலா சென்றடைந்த முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.