துபையிலிருந்து வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 4.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: துபையிலிருந்து கொல்கத்தாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மகாத்மா காந்தி சாலையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டோம்.
அப்போது, குறிப்பிட்ட 2 பேரிடமிருந்து 16.3 கிலோ எடையிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 4.7 கோடி ஆகும். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்தத் தங்கம் துபையிலிருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.