புதுதில்லி: தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை வி.கே.சசிகலா தரப்புக்கு சாதகமாக பெற ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்காக தில்லி சாணக்கியபுரி காவல் நிலைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் டி.டி.வி.தினகரனிடம் மூன்றாவது நாளாக இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனிடம் சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அவரிடம் கேட்கப்பட்ட எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கும், பிற கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
இதனால், அவரையும், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், அவரது நண்பரும், பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் ஆகியோரையும் மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருந்தோம்.
இதன்படி, மூவரும் தில்லி காவல் துறை குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தனர்.
மூவரிடமும் தில்லி காவல் துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் மதுர் வர்மா, உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் ஆகியோர் சுமார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதில் கூறினார்.
சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையில் தினகரன் அளித்த ஒரே வரியில் பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாத நிலையில் இன்று (ஏப் 24) மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.