மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவை மேற்கு வங்க மக்கள் ஆதரிக்க வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கரில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் பலியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் கே.கே. தாஸின் உடல், அவரது சொந்த ஊரான கூச் பிகார் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு வரும் பாஜகவின் ஹிந்துத்துவக் கொள்கைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் உண்மையிலேயே ஹிந்துக்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஹிந்து மதத்தைக் களங்கப்படுத்துபவர்கள்.
நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவள்தான். அதேசமயத்தில், நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்; நேசிக்கிறேன். ஆனால், மதத்தின் பெயரால் வகுப்புவாதப் பதற்றத்தை உருவாக்கும் கட்சி பாஜக. இத்தகைய செயல்களை நாங்கள் (திரிணமூல் காங்கிரஸ்) என்றைக்கும் சகித்துக் கொள்ள மாட்டோம்.
எனவே, மததத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவை மேற்கு வங்க மக்கள் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது.
தீஸ்தா விவகாரம்: வங்கதேசத்தை நாங்கள் நேசிக்கிறோம். அதேசமயத்தில், தீஸ்தா நதிநீர் விவகாரத்தில் முன்யோசனையுடன் செயல்பட வேண்டியதும் அவசியமாகியுள்ளது. தீஸ்தா நதிநீரை வங்கதேசத்துக்கு வழங்குவதால் மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, இதற்கான மாற்றுத் திட்டத்தை மாநில அரசு பரிந்துரைத்திருக்கிறது என்றார் மம்தா.