புதுதில்லி: பொதுப்பணித்துறைகளில் மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்தியாவில் கையூட்டு லஞ்சம், ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் தொடர்பாக ஊடக ஆய்வுகள் மையம் என்ற தனியார் நிறுவனம் ஒன்று தனது ஆய்வினை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் கர்நாடக மாநிலமும், 3-ஆம் இடத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. .
ஊடக ஆய்வுகள் மையம் என்ற தனியார் நிறுவனம் 20 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை நேற்று அந்த நிறுவனம் வெளியிட்டது. இதில், கார்நாடகா மாநிலம் 77 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே பொது சேவையை பெறுவதில் ஊழல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதில் முதல் மாநிலம் என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் வரிசையில் ஆந்திரா இரண்டாவது இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து முறையே 68 சதவீத புள்ளிகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும், மகாராஷ்டிரா நான்காவது இடத்திலும், ஜம்மு-காஷ்மீர் ஆறாவது இடத்திலும் உள்ளன.
இதற்கான ஆய்வுகள் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்காளம், அசாம், கர்நாடகா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 20 மாநிலங்களில் கிராமம் மற்றும் நகரங்களை சேர்ந்த 3 ஆயிரம் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில், உயர்மதிப்புடைய பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்பப்பெற்ற நவம்பர் மற்றும் டிசம்பரில் மாதங்களில் மட்டும் லஞ்சம் குறைந்திருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில் ஊழல் குறைவாக காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் இமாச்சல பிரதேசம், கேரளா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 53 சதவீதம் பேர், அதாவது 3-ல் ஒரு வீட்டைச் சேர்ந்தவர் அரசு திட்டங்களை பெற கையூட்டு லஞ்சம் கொடுத்துள்ளனர்.
அரசு சேவைகளை பெறுவதற்காக, கடந்த ஓராண்டில் மட்டும் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். 2017-ஆம் ஆண்டில் இதுவரை ரூ.6,350 கோடி லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.20,500 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதே நிறுவனம் 2005-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் ஊழல் மலிந்த மாநிலமாக பீகார் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் முடிவையடுத்து அரசு துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கா வழிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.