பணியின் போது உயிரிழக்கும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் வாரிசுகளுக்கு விண்ணப்பித்த மூன்று மாதங்களில் பலன்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அஞ்சலகத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பணியின் போது உயிரிழக்கும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் கிடைக்கும் பலன்கள் தொடர்பான திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த காலத்தில் கருணை அடிப்படையிலான பலன்கள் ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு கிடைக்கும்.
கிராமப்புற அஞ்சலக ஊழியரை சார்ந்திருக்கும் பெற்றோருடன் வசிக்கும் திருமணமான மகன், விவகாரத்து பெற்ற மகள், மருமகள் ஆகியோருக்கும் கருணை பலன்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, எதிர்பாராத நிலையில் உயிரிழக்கும் கிராமப்புற அஞ்சலக ஊழியரின் வாரிசுகளில் குறிப்பாக பெண்கள் பலனடைவர்.
பணியின் போது உயிரிழக்கும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விண்ணப்பித்த மூன்று மாதங்களில் பலன்கள் வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.