உத்தரகண்ட் மாநிலம், விகாஸ்நகர் பேரவைத் தேர்தலின்போது வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டம், விகாஸ்நகரில் கடந்த பிப்ரவரி மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் முன்னா சிங் செளஹான், காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நவ்பாரத்தை 6,418 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டதாகவும், அதனாலேயே முன்னா சிங் வெற்றி பெற்றதாகவும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் நவ்பாரத் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், விகாஸ்நகர் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை சீல் செய்து, அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு அந்த நகர நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவவோ, அதில் முறைகேடு செய்யவோ முடியாது என்று தேர்தல் ஆணையும் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.