மும்பை: மும்பையில் சின்னத்திரை நடிகை ஒருவருக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இணையதளம் மூலம் அந்த நடிகையின் செல்லிடப்பேசி எண்ணை அறிந்துகொண்ட ஸ்வப்னில் சஹாரே (23) என்ற கல்லூரி மாணவர், அதன்பிறகு "வாட்ஸ் அப்'பில் நடிகைக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பத் தொடங்கினார்.
இதுகுறித்து, மும்பை புறநகரான மாலாட் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் அந்த நடிகை புகார் அளித்தார். செல்லிடப்பேசி எண் மூலம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த மாணவரின் அடையாளம், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தன.
கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அந்த அதிகாரி.