புது தில்லி: பாலியல் குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யும் படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கைதான சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பெண் ஒருவரையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, மற்றொரு வழக்கில் மீண்டும் சிறை சென்றார்.
காயத்ரி பிரஜாபதிக்கும், அவரது 2 உதவியாளர்களுக்கும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் (போஸ்கோ) நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
எனினும், மற்றொரு வழக்கில் காயத்ரி பிரஜாபதியை காவலில் வைக்குமாறு தலைமை நீதிபதி சந்தியா ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை உத்தரவிட்டார். ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குரின் மனைவியும், சமூக நல ஆர்வலருமான நூதன் தாக்குர் பிரஜாபதிக்கு எதிராக காவல் நிலையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தார்.
அதாவது, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கும், தனது கணவருக்கு எதிராகவும் பொய்யான பலாத்கார புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரஜாபதி முன்வைத்ததாக அவர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காயத்ரி பிரஜாபதி, போக்சோ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
இதனை ரத்து செய்யக் கோரி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.