சண்டிகர்: தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளின் ஆடையை நீக்கச் செய்து ஆசிரியை ஒருவரே தண்டனை அளித்த விவகாரம், ஹரியானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் லாந்துராவில் ஜே.பி. சர்வதேச பள்ளி என்னும் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த ஆங்கில தேர்வு ஒன்றில், ஆறாம் வகுப்பு மாணவிகள் இருவர் மிகக் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் ஆசிரியை ஒருவர் மோசமாக திட்டி உள்ளார்.
பின்னர் இரு மாணவிகளை வகுப்பறையில் அவர்களது ஆடைகளை களையச் செய்து துன்புறுத்தி உள்ளார். கடந்த ஓன்றாம் தேதியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் நேர்ந்த சம்பவத்தை தற்பொழுது பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். குறிப்பிட்ட ஆசிரியை மீது தற்பொழுது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.