புதுதில்லி: வரும் அக்டோபர் 1, 2017 முதல் இனி மரணத்தினை பதிவு செய்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இறந்தவரை அடையாளம் கண்டுபிடித்து அவரது இறப்பினை பதிவு செய்வதற்கு, வரும் அக்டோபர் 1, 2017 முதல் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பானது ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் மேகலாயா மாநிலங்களுக்கு பொருந்தாது. அந்த மாநிலங்களில் இந்த முறை எப்பொழுது அமல்படுத்தப்படும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இது தொடர்பாக மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் பதிவுத்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ள குறிப்பில், 'இறந்தவர்கள் யார் என்பது தொடர்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கும் தகவல்களை ஒப்பிட ஆதார் தகவல்கள் உதவும்.
இது அடையாளத் திருட்டினை தடுத்து நிறுத்த உதவும். அத்துடன் இறந்தவரின் அடையாளத்தினை நிரூபிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதனையும் தவிர்க்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.