அகமதாபாத்: குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய பெருமழையின் காரணமாக குஜராத் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் .
அந்த வகையில் பனாஸ்காந்தா பகுதியில் பார்வையிடுவதற்காக சென்ற ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ராகுலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் அவருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டு உள்ளது. பின்னர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனால் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் ராகுல் காந்திக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. எதிர்ப்பு இருந்த போதிலும் விரைவில் ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. தாக்குதல்காரர்கள் பிரதமர் மோடி என கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ராகுலின் கார் மீதான தாக்குதலை போலீசும் உறுதி செய்து உள்ளது. இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.