அடுத்த மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவர் சரத் யாதவ் தங்களுக்கு உதவுவார் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர் (ஜேடியு) நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை கடந்த வாரம் ராஜிநாமா செய்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்த நிதீஷ் குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி வெளிப்படுத்திய ஜேடியு மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் யாதவ், தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். விரைவில் அவர் புதிய கட்சி தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாலு பிரசாத் இதுதொடர்பாகக் கூறியதாவது:
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூரில் தங்கவைத்ததற்காக கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தும் மத்திய அரசு, அதானி போன்ற பெருநிறுவன அதிபர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? வெளிநாடுகளில் ரகசியமாக முதலீடு செய்ததாக பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த 424 பேரின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தவில்லை?
சரத் யாதவ் வரும் 8-ஆம் தேதி பிகார் வருகிறார். மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்த மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்க்க அவர் உதவி செய்வார் என நம்புகிறோம் என்றார் அவர்.