நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகிய இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மும்பையில் வசித்து வரும் இவர்கள் சமீபத்தில் பூனேயில் நடைபெற்று வரும் ‘சத்யமேவ ஜெயத்தே வாட்டர் கப் 2017’ என்கிற நிகழ்வில் காணொளி வாயிலாக மக்களிடையே பேசும்போது இதைத் தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பல பிரபலங்களுடன் சத்யமேவ ஜெயத்தே நிகழ்ச்சியை நடத்தி வரும் அமீர் கானும் பங்கேற்பதாக இருந்த நிலையில் எதிர்பாராத விதமாகப் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பங்கேற்பதைத் தவிர்த்ததாக அவர் கூறியுள்ளார்.
“நாங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் விருப்பத்துடன் காத்திருந்த நிலையில் எதிர்பாராத சோதனையாக எச்1.என்1 நொயால் பாதிக்கப்பட்டோம், எங்களை கட்டாயம் முழு ஓய்வு எடுக்குமாறு எங்களது மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்” என்று பார்வையாளர்களுக்கு அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமீர் கான் சார்பாக நடிகர் ஷாருக் கான் கலந்து கொண்டார். “இன்று நண்பர்கள் தினமாக இருப்பதால், என் சார்பாக, எனது கடமைகளை பூர்த்தி செய்ய எனது நண்பரான ஷாருக் கானிடம் வேண்டுதல் விடுத்தேன், அவரும் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனடியாக ஏற்றுக் கொண்டார்” என்றும் அமீர் கான் கூறினார்.
இந்த நிகழ்வில் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திரபாதான்விஸ், ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீதா அம்பானி, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.