காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சென்ற கார் மீது குஜராத்தில் கல் வீசித் தாக்கப்பட்டது. இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. இருப்பினும் ராகுல் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதன் பல்வேறு தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், குஜராத் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் காரில் செல்ல ராகுல் மறுத்துவிட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதில் பாஜகவுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லை என அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலைக் கொல்ல பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.
முன்னதாக, ரயில்வே கேன்டீன் உணவக ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மகன் தேஸ்வியை சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதனால் பீகாரில் ஆட்சி நடத்தி வந்த ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் விலகியது.
நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் தங்களின் பழைய கூட்டணியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைத்தார்.