இந்தியா முழுவதும் டீமானிடைஸேஷன் எனப்படும் பண மதிப்பு விவகாரம் தொடர்பாக புதிய முறையை ஆளும் பாஜக அரசு ஏற்படுத்தியது. அதில், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. கறுப்பு பணம், ஊழல் உள்ளிட்டவற்றை அடியோடு ஒழிக்கவே இந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதன்காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் இதன் தாக்கம் அடுத்த 3 மாதங்களுக்கு இருக்கவே செய்தது. இதனால் ஏற்படும் சிக்கல்களைப் பொறுத்துக்கொள்ளுமாறும், அது நாட்டுக்கு செய்யும் சேவை எனவும் மோடி கூறினார்.
இந்தப் புதிய ரூபாய் நோட்டுகளிலும் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டது. ஆங்காங்கே அவசரகதியில் சரியான முறையில் அச்சடிக்கப்படாத நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. இன்னும் சொல்லப்போனால் வங்கிகளில் உள்ள தானியங்கி பண இயந்திரங்களிலேயே வந்தன. மேலும், கள்ள நோட்டுக்களும் வெளியாகின.
இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை மேலும் அச்சடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட மத்திய அரசு முடிவு செய்தது. இதன்காரணமாக ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கின.
இந்நிலையில், இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் முதலில் வெளியானதற்கும் தற்போது வெளியானதற்கும் தோற்றத்தில் வேறுபாடு உள்ளதாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்:
புதிதாக அச்சடிக்கப்பட்டு வெளியான 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளது. அதிலும் குறிப்பாக 2 விதமான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதை நீங்களே பாருங்கள். (அப்போது அவற்றை எடுத்துக் காண்பித்தார்). இந்த பண மதிப்பு நடவடிக்கை எதற்கு என்ற காரணம் இப்போதுதான் புரிந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி இதுவரை ஏன் எந்த
விளக்கமும் அளிக்கவில்லை என்றார்.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே அவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.