குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக நள்ளிரவுக்கு மேல் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக நள்ளிரவுக்கு மேல் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த வாக்குகளைச் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம் வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. இதையடுத்து, அகமது படேல் 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தேர்தல் ஆணையம் இது தொடர்பான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் விதிமீறலில் ஈடுபட்டது குறித்து தங்களது தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்காத நிலையில், வாக்குகளை எண்ணக் கூடாது என்று பாஜக ஆட்சேபம் தெரிவித்தது. அகமது படேல் வெற்றியையடுத்து பாஜக நீதிமன்றம் செல்லக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்மிருதி இரானி, அகமது படேல் உள்ளிட்ட 3 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த 3 இடங்களுக்கும் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பாஜகவில் அண்மையில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிட்டனர். இதில், அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதி என்ற நிலையில், ராஜ்புத், அகமது படேல் ஆகிய இருவரில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தத் தேர்தலில், அண்மையில் ராஜிநாமா செய்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தவிர்த்து, 176 எம்எல்ஏக்களும் பங்கேற்று வாக்குகளைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதாக இருந்தது. ஆனால் அவ்வாறு வாக்குகள் எண்ணப்படவில்லை.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராகவ்ஜி பாய் படேல், போலா பாய் கோஹில் ஆகிய 2 பேர், வாக்குகளை அளித்ததும், அதை காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதியிடம் மட்டுமன்றி, பாஜகவினரிடமும் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும், காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர்.
இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி தங்களது வாக்குகளை பிறரிடம் 2 பேரும் காண்பித்ததால், அவர்களது வாக்குகளைச் செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா, ஆர்பிஎன் சிங் ஆகியோர், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட விடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.
வாக்குகளை உடனடியாக எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும்-பாஜக: காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் அடங்கிய பாஜக குழுவும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தது. அப்போது, காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரமில்லாதவை என்று பாஜக குழுவினர் மறுத்தனர். தேர்தலில் பதிவான வாக்குகளை உடனடியாக எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக குழுவினர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முடிவே இறுதி' என்றார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், 'தேர்தல் தோல்வி பயத்தில் காங்கிரஸ் கருத்துகளை வெளியிடுகிறது' என்றார்.
இதையடுத்து, காங்கிரஸ் அளித்த விடியோ ஆதாரத்தின் மீது தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி, அதை ஏற்றுக் கொண்டது. தேர்தலின்போது விதியை மீறிய காரணத்துக்காக 2 எம்எல்ஏக்களின் வாக்குகளை செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், வாக்கு எண்ணிக்கையை தொடங்கும்படியும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து, சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2 எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட காரணத்தால், வெற்றிக்கு 44 வாக்குகள் போதும் என்ற நிலை ஏற்பட்டது.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏ சோட்டு வசவா, காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா, அகமது படேலுக்கு எதிராக வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.
இதேபோல், வகேலா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேரும், கட்சி மாறி வாக்களித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் கெலாட் தெரிவித்தார்.
காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏ: பாஜக எம்எல்ஏ கோடாதியா என்பவர், கட்சி மாறி, காங்கிரஸுக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com