பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளபோதிலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அமளியில் ஈடுபட்டார்.
புதிய கூட்டணியால் அதிருப்தியடைந்ததன் வெளிப்பாடாகவே சரத் யாதவ் இவ்வாறு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுடன் அமைத்திருந்த மகா கூட்டணியிலிருந்து வெளியேறிய முதல்வர் நிதீஷ் குமார், அங்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
ஆனால், நிதீஷ் குமாரின் இந்த நடவடிக்கையானது, ஐக்கிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் யாதவுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தமது அதிருப்தியை அவர் அண்மையில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சரத் யாதவும் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதிலும், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சரத் யாதவ் அமளியில் ஈடுபட்டது பிகார் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.