உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் கடந்த 2 நாட்களில் மட்டும் 32 குழந்தைகள் வரை பலியான அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் 62 பேர் அங்கு உயிரிழந்தனர்.
அம்மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மூளை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதற்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றன.
குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே இத்தனை பெரிய கோரச் சம்பவம் நடந்தும் முதல்வர் மௌனம் காப்பது எங்களுக்கு வியப்பாக உள்ளது என சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டியது.
கோரக்பூர் மருத்துவமனையில் நடந்த இந்த குழந்தைகள் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று உடனே யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்த மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த துயரச் சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத், தனிப்பட்ட முறையில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் கேவலமான ஆட்சி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக, எதிர்கட்சிகள் இந்த துயரச் சம்பவங்களையும் அரசியலாக மாற்றுவதாக தெரிவித்துள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் மக்கள் நலனுக்காக மட்டுமே இயங்குவதாக விளக்கமளித்தது.