அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா வரும் நவம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
ஹைதராபாதில் நவம்பர் 28-ம் தேதி சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு தொடங்குகிறது. இதில், பங்கேற்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவுக்கு இவான்கா தலைமை வகிக்கிறார்.
சர்வதேச அளவில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இவாங்கா இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இத்தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடியும், இத்தகவலை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஹைதராபாதில் நவம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை நடத்துகின்றன.
இவான்காவும் தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடியுடன் கைகுலுக்குவது போன்ற படத்துடன், தனது இந்தியப் பயணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் அமெரிக்கக் குழுவுக்கு தலைமை ஏற்பதை எனக்கு கிடைத்த கெளரவமாகக் கருதுகிறேன். பிரதமர் மோடியையும், சர்வதேச தொழில்முனைவோர்களையும் சந்திக்க ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று கூறிப்பிட்டுள்ளார்.
35 வயதாகும் இவான்கா, அமெரிக்க அதிபரின் ஆலோசகராகவும் உள்ளார். கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட மோடி, டிரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது இவான்காவின் இந்தியப் பயணம் குறித்து முடிவெடுக்கப்பட்டது.