கோராக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அங்கு மூளை பாதி்ப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் உயிரிழக்கும் துயரச் சம்பவம் நடந்து வருகிறது.
இந்த அரசு மருத்துவமனையானது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் நிலுவையில் உள்ளதால் அவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர். ஆனால், இதை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் மறுத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த துயரச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் விலக வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் ஆகஸ்ட் 7-ந் தேதி முதல் இதுவரை குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் உயிரிழந்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.