""நிதீஷ் குமார் மட்டும் ஐக்கிய ஜனதா தளம் அல்ல; நானும் ஐக்கிய ஜனதா தளம்தான்'' என்று சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஜேடி(யு) கூட்டணி அமைத்ததை எதிர்த்து வரும் சரத் யாதவ், அதுகுறித்து அந்த மாநில மக்களை நேரில் சந்தித்து விளக்கமளித்து வந்தார். மாதேபூரா மாவட்டத்தில் அவர் பேசுகையில், "மகா கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் சேர்ந்து நிதீஷ் ஆட்சியமைத்தது மிகுந்த வேதனையை அளித்தது. பிகாரில் 2 ஜேடி(யு) உள்ளது. அதில் ஒரு ஜேடி(யு) ஆட்சியில் உள்ளது. மற்றொரு ஜேடி(யு) மக்களுடன் உள்ளது.
சுயநல நோக்கத்துக்காகவே, நிதீஷ் குமாருடன் எம்எல்ஏக்கள், தலைவர்கள் உள்ளனர். என்னுடன் இருப்பவர்கள் அனைவரும், மக்கள் தொண்டர்கள் ஆவர்' என்றார். பதவிப் பறிப்பு குறித்து கருத்து தெரிவிக்காத சரத் யாதவ், "எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை கண்டே நான் பயப்படவில்லை; அப்படியிருக்கும்போது மற்றவர்களுக்காகவா பயப்பட போகிறேன்? பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களால் தேர்வு செய்த மகா கூட்டணியில்தான் நான் உள்ளேன்' என்றார்.